Search This Blog

Dec 8, 2014

பலம் தரும் பானக நரசிம்மர்




வேதாத்ரி



அதிகாலை. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய வேளை. மணி நான்கு. பிரிய மனமில்லாமல் மட்டபல்லி நாதன் இருக்கும் திசை நோக்கி வணங்கிய பின் வேதாத்ரி நோக்கிப் பயணம் தொடங்கியது. வேதாத்ரி மற்றும் மங்களகிரி தல விசேஷத்தை முக்கூர் லஷ்மி நரசிம்மாசாரியாரின் விளக்கம் மூலம் அறிதல் தெளிவு.

“வேதாத்ரியிலே உள்ள எம்பெருமானுக்கு யோகானந்தன் என்று பெயர். கிருஷ்ணா நதி தீரத்திலே பெரிய சாளக்கிராம மூர்த்தியாக அவன் காட்சியளிக்கிறான். உள்ளுக்குள்ளே அழகாக அமர்ந்திருக்கிறான். அவனது இடையிலே ஒரு கத்தி வைத்திருக்கிறான். இந்த யோகானந்த நரசிம்ஹனை ஸேவிக்கப் போனால் அந்தக் கத்தியை எடுத்துக் கையிலே கொடுப்பார்கள். அதை வாங்கிப் பார்க்கலாம். பகவானே பெரிய வைத்தியன் என்கிறது வேதம். முதல் வைத்தியன் அவன். மருந்தாகவும் இருக்கிறான்; மருத்துவனாகவும் அவனே இருக்கிறான். இங்கே கத்தி வைத்துக் கொண்டிருக்கிற எம்பெருமான் பெரிய `சர்ஜன்`; `ஆபரேஷன்` பண்ணுவதிலே திறமை மிக்கவன்.”
“ஆரோக்கியத்தைக் கொடுக்கும்படியான எம்பெருமான் அங்கே வேதாத்ரியிலே எழுந்தருளி யிருக்கிறான். இப்போதும் எத்தனையோ பேர் அங்கே வேண்டிக்கொண்டு பிரதஷிணம் பண்ணிக் கொண்டிருக் கிறார்கள். வேதாத்ரியிலே நூறாவது யக்ஞம் நடந்தது. “ஆரண மலைவாழ் ஆளரியே—உனை காரணம் என நான் இனி அறிந்தேன்” என்ற பாடலானது, அங்கே வேதாத்ரியிலே இருந்தபோதுதான் அடியேன் வாக்கில் வந்தது. ஆரணமலை என்று வேதாத்ரிக்கு ஒரு பெயர்.”

கிருஷ்ணா நதியில்
வேதாத்ரி கோயிலில் இருந்து, பல படிகள் இறங்கிப் போனால் கிருஷ்ணா நதி நீர் சிலுசிலு என்று காலைத் தழுவிச் செல்கிறது. இளஞ்சூரியக் கதிர்கள் நதி நீரில் பட்டு வைரமாய் ஜொலிக்கின்றன. அங்கே ஒரு பெரிய பாறை மீது திருமண் இட்டுடிருக்கிறார்கள். அதுவும் நரசிம்மனே என்று கூறும் பக்தர்கள் புனிதம் கருதி அதனை நோக்கி நீரில் நீந்திச் செல்வதில்லை.
இங்கு நீரில் நரசிம்மன், சமதளத்தில் நரசிம்மன், குன்றின் மீது நரசிம்மன் என்று எங்கெங்கு நோக்கினும் நரசிம்மர்கள். கிருஷ்ணாவின் ஈரப்பதத்தைச் சுமந்து வந்த காற்றை அனுபவித்தபடி, மங்களகிரி பயணம். மலை மீது உள்ள கோயிலின் அருகேயே காரில் செல்ல முடிகிறது. அங்கிருந்து பார்த்தால் விஜயவாடா நகரம் முழுமையாகத் தெரிகிறது. துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள். இந்த விளக்கில் முன்னூற்று அறுபத்து ஐந்து திரிகள் இருப்பதாகவும், ஒரு தீபம் ஏற்றினால் ஒர் ஆண்டு தீபம் ஏற்றிய பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது. இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும். இந்த மங்களகிரி நரசிம்மனைக் குறித்து முக்கூர் சுவாமிகள் வாக்கில் அனுபவிக்கலாம்:
“மங்களகிரி நரசிம்ஹன்தான் முதன்முதலில் யக்ஞம் பண்ணும்படி அடியேனை ஆக்ஞாபித்தான். அந்த ஆக்ஞைப்படி ஆஸ்திக சமாஜத்தில் முதல் யக்ஞம் நடந்தது. மங்களகிரி ஷேத்திரத்து எம்பெருமானும் கிருத யுகத்திலேயிருந்து இருக்கும்படியான எம்பெருமான் அவனுக்குப் பாலையே அந்த யுகத்தில் நைவேத்யம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். திரேதா யுகத்தில் இஷூசாரம் (கரும்புச் சாறு). துவாபர யுகத்திலே தேன். இந்த யுகத்திலே கற்கண்டுப்பானகமும் வெல்லப்பானகமும் நிவேதனம்.





அந்த எம்பெருமான் இருக்கிறானே, அவன் பாதியைச் சாப்பிடுவான்; பாதியை நமக்குக் கொடுப்பான். அவனுக்கு அப்படியொரு சக்தி. மலை மேலே ஜலம் கிடையாது. கீழேயிருந்துதான் காவடியிலே எடுத்துக் கொண்டு போக வேண்டும். அங்கே மேலே, பானகம் தயார் பண்ணக்கூடிய பெரிய கல் இருக்கிறது அந்தக் கல்லில் வைத்து வெல்லத்தை உடைப்பார்கள்.
அதை எடுத்து ஒரு கங்காளத்திலே கரைத்து, வழிய வழிய பகவானுக்கு நிவேதனம் பண்ணுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்…
ஒரு சங்கிலே பானகத்தை எடுத்து, வைகானச ஆகம ரீதியாய், புருஷசூக்தத்தைச் சொல்லி, அந்த நரசிம்ஹனின் `அலைத்த பேழ் வாயிலே’ சேர்க்கிறார் பட்டர்… அப்படிச் சேர்க்கிற பானகம் உள்ளே போய்க் கொண்டேயிருக்கும். கங்காளத்தில் பாதி ஆனவுடனேயே கலகலவென்று சப்தம் வரும். நரசிம்ஹன் பாதி பானகத்தை ஸ்வீகரிப்பான். அதன் பிறகு உள்ளே செல்லாமல் வெளியிலே வரும். அப்படி வருவதை சேஷமாக சங்கத்திலே எடுத்து, நம்மிடம் பிரசாதமாகக் கொடுத்துவிடுவார்கள்.
சின்னஞ்சிறு குடத்திலே நைவேத்யம் கரைத்து வைத்தாலும் பாதி; பெரிய கங்காளத்திலே நிவேதனம் பண்ணினாலும் பாதிதான் ஸ்வீகரிப்பான் எம்பெருமான்.
“அர்தம் தாஸ்யாமி! பாதி கொடுக்கிறேன்; பாதி நான் எடுத்துக் கொள்கிறேன்” என்கிறான் பரமாத்மா. இன்றளவும் பானக சகதியாக இருக்கும்படியான அந்த இடத்திலே ஒரு ஈ எறும்பு கூட வராது. ஆகையினாலே பகவானுக்குப் பண்ண வேண்டிய பானகத்தில் ஒரு ஈ - எறும்பு இருக்காது. ஆனால், நிவேதனம் பண்ணி எடுத்து வந்த பிற்பாடு அதிலே ஈ – எறும்பு மொய்க்கும்! சாமானிய ஜந்துக்களெல்லாம் கூட “ இது நிவேதனம் பண்ணிய பதார்த்தம்; இது நிவேதனம் பண்ணாதது” என்று ஈடுபடுகிற ஒரு ஷேத்திரம் இந்த மங்களகிரி.”
“ அன்னமய கோசத்தில் சுத்தி ஏற்பட மங்களகிரி நரசிம்ஹனை தியானம் பண்ணவேண்டும். அடுத்து, பிராணமய கோசத்தில் சுத்தி ஏற்பட வேதாத்ரி நரசிம்ஹனை தியானம் பண்ண வேண்டும். மனோமய கோசத்தில் சுத்தி முக்கூர் ஏற்பட மட்டபல்லி லஷ்மி நரசிம்ஹனை தியானம் பண்ண வேண்டும். விஞ்ஞான மயகோசத்தில் சுத்தி உண்டாக வாடபல்லி லஷ்மி நரசிம்மனைத் தியானம் பண்ண வேண்டும். ஆனந்த மயகோசத்தில் சுத்தி பெற கேதவரம் லஷ்மி நரசிம்ஹனைத் தியானம் பண்ண வேண்டும்.
இந்த ஐந்து ஷேத்திரங்களிலும் நரசிம்ஹனைத் தியானம் பண்ண, இந்த ஐந்து நிலைகளிலும் சுத்தி ஏற்படும்; தெளிந்த ஞானம் பிறக்கும். பகவானை அனுபவிக்கும்படியான நிலையை நாம் அடைவோம்” என்று முக்கூர் லஷ்மி நரசிம்மாசாரியார் உபன்யாசத்தில் இருந்து எடுத்தாளப்பட்ட குறையொன்றுமில்லை என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிவேதனம் செய்யப்பட்ட பானகத்தை விநியோகிக்கும் இடத்தில் ஈ, எறும்புகளுடன் பக்தர்கள் கூட்டமும் மொய்த்தது. எவ்வளவு கேட்டாலும் மறுக்காமல் பிரசாதத்தை அவன் அருளைப் போலவே அள்ளி அள்ளித் தருகிறார்கள்.
பஞ்ச நரசிம்ம சேஷத்திரப் பயணம் அருள் மிகுந்த இனிப்புப் பிரசாதத்துடன் நிறைவு பெற்றது.
(நிறைவுற்றது)

Source:  The Hindu (tamil)




MANGALAGIRI PANAGA NARASIMHAR

MANGALAGIRI LAKSHMI NARASIMHAR


Dec 6, 2014

வாரி வழங்கும் வாடபல்லி நாதன்


ஆன்மிகப் பயணத் தொடர் - பஞ்ச நரசிம்ம ஷேத்திர தரிசனம் 4
மட்டபல்லி, வாடபல்லி என ஊர்ப் பெயர்களில் எங்கே பார்த்தாலும் பல்லிதான். சூரியன் மேற்கே மறைய, கிருஷ்ணா மற்றும் மூசி நதிகள் சங்கமிக்கும் இடமான இந்த நதிக்கரையில் கோயில் கொண்டுள்ளான் எம்பெருமான் வாடபல்லி நாதன். அதே நதிக்கரையில் அபூர்வமான சிவனும் கோயில் கொண்டுள்ளான். இத்தல வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது. இதனைக் குறித்த முக்கூர் சுவாமிகளின் விளக்கம் இன்னும் ஆனந்தம்.
“வாடபல்லி ஷேத்திரத்திற்குத் `தீபாலயம்’ என்று பெயர். மூசி நதியும் கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும்படியான ஷேத்திரம். அப்படிப்பட்ட ஷேத்திரத்திலே அகஸ்தியருக்குச் சேவை கொடுத்தான் எம்பெருமான்.
வாடபல்லியிலே, பூமாதாவோடு சேர்ந்த மூர்த்தியாக அவன் காட்சியளிக்கிறான். அங்கே கிருஷ்ணா நதிக்கரையிலே ஈஸ்வரன் ஆலயம் இருக்கிறது. அந்த ஈஸ்வர மூர்த்தி சிரஸிலிருந்து கங்கையானது சலசலவென்று பெருகிவருகிறது — இன்றைக்கும் பார்க்கலாம் — கங்கையானது கொட்டிக்கொண்டே இருக்கிறது.
ஈசுவராலயத்தைத் தாண்டி உள்ளே கோட்டைக்குள்ளே நரசிம்ஹன் ஆலயம். தீபாலயம் என்று அதற்குப் பெயர். கார்த்திகை மாதத்திலே அங்கே யக்ஞம் பண்ணுவதுண்டு. `தீபாலயத்தில் யக்ஞம் பண்ணு’ என்று லஷ்மி நரசிம்ஹன் ஆக்ஞாபித்தான். அது எங்கு இருக்கிறது என்று முதலில் தெரியவில்லை. அப்புறம் விசாரித்தால் இந்த இடம் என்று சொன்னார்கள். ஆச்சர்யமான ஷேத்திரம் அது. பகவானுடைய மூக்குக்கு நேரே ஒரு தீபம் இன்றைக்கும் எரிந்துகொண்டு இருக்கிறது. அவன் திருவடிக்கு நேரே ஒரு தீபம் எரிந்துகொண்டிருக்கிறது — ஜூவாலை.
கர்ப்பகிருஹத்தினுள்ளே காற்று புகக்கூட இடமில்லை. அவ்வளவு நெருக்கமான இடம். அந்த இடத்திலே மூக்குக்கு நேரே இருக்கிற ஜூவாலை மாத்திரம் ஆடிக்கொண்டே இருக்கும். அங்கே போகிறவர்களுக்கு நன்றாகத் தெரியும். கீழே இருக்கிற தீபம் அப்படியே ஆடாமல் இருக்கும். மூக்குக்கு நேரே இருப்பது மட்டும் ஆடும்! இதிலிருந்து என்ன தெரிகிறது? எம்பெருமானுடைய மூச்சுக் காற்றானது அப்படியே அந்த தீபத்தின் மேல் காற்றுப்பட்டு அலைகிறது. அவ்வளவு ஜீவ களையோடு பரமாத்மா அங்கே எழுந்தருளியிருக்கிறான்” என்று முக்கூர் சுவாமிகள் தனது ‘குறையொன்றுமில்லை' புத்தகத்தில் வாடபல்லியை வர்ணித்துள்ளார்.
வாடபல்லியில் அர்ச்சக சுவாமியின் குரலில் சுந்தரத் தெலுங்கினில் தல புராணம் கேட்க முடிந்தது. தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், இந்தத் தீபாலயத்திற்குத் தீபங்கள் ஏற்ற நெய் கிடைக்கிறது. இது மேலும் அதிகரித்தால், தொடர்ந்து இந்தத் தீபங்களை ஏற்றலாம் என்றார் அவர்.
பறவைகள் கூடடையும் வேளையில் கிளம்பி, மீண்டும் மட்டபல்லி நோக்கிப் பயணம். வழியில் ஹுசூரில் யக்ஞ வாடிகையில் நடைபெற உள்ள சுவாதித் திருமஞ்சனத்திற்காகப் பக்தர்கள் பூ, பழங்கள் வாங்கிக்கொள்கிறார்கள். இரவு என்றாலும் டீ குடிக்கிறார்கள். மட்டபல்லியில் நடு இரவில்தான் தொடங்க இருக்கிறது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். விடிய விடிய களைகட்டும் இந்நிகழ்ச்சியை அனுபவிக்க விழித்திருக்க வேண்டுமே.

சுவாமி திருமஞ்சனம்
யக்ஞ வாடிகையில் இரவு உணவு தயார். தைத்த பலாச இலையில் வைணவ முறைப்படி முதலில் வந்து விழுந்தது சாதம். பைங்கன் (கத்தரிக்காய்) காரக் கறி, குடை மிளகாய் சாம்பார், புடலைக் கூட்டு, தக்காளி ரசம், மோர் மற்றும் யக்ஞ வாடிகையில் உள்ள தெய்வங்களுக்கு நிவேதனம் செய்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதம். தைத்த பலாச இலையில் இருந்து, சிறு குச்சிகள் உருவிக்கொள்ளாமல் உண்ணும் சாமர்த்தியம் இன்னும் ஞாபகத்தில் இருப்பது ஆச்சரியம். இந்து சனாதன தர்மம் உள்ளத்து தூய்மையைப் போற்றுகிறது. மேலும் சாஸ்திர சம்பிரதாயமோ, உடல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுகிறது. அதில் முக்கியமானது இலையில் அன்னமிட்டுச் சாப்பிடும் பழக்கம்.
மட்டபல்லி நாதனைக் காண மனம் விழைந்தது. ஏதோ பல காலம் பிரிந்துவிட்டாற்போல் மனம் ஏக்கங் கொண்டது. பத்து இருபது படி இறங்கிக் கீழே சென்றால் நதிக்கரை நாதனாய் மட்டபல்லி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் குகை சன்னதி. குகைச் சுவர்களில் நீர்க் கசிவு. இந்த இடத்தை விட்டுப் பிரியப் போகிறோம் என்பதால் மனம் கசிந்தது. அந்த லக்ஷ்மி நரசிம்மரின் சுயம்பு திருமேனித் திருமுகத்தில் மட்டுமல்ல, அவரது கண்களிலும் ஒளிரும் ஈரக் கசிவைத் தீப ஒளியில் காண முடிந்தது. பார்த்த விழி பார்த்தபடி இருக்க, நரசிம்மரது வெள்ளி மீசை பிரகாசமாகத் தோற்றமளித்தது. ஐயனே, ஆனந்த சொரூபனே, அகிலாண்ட நாயகனே என்று கூவி அழைத்தது மனம்.
இந்தக் குகை சன்னதிக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். இவர்கள் சுற்றுப்புறக் கிராமவாசிகள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இரவு கூடுவார்கள். சன்னதி சாத்திய பிறகு இரவு நேரம் ஏறஏற, சுமார் ஐநூறு பேர் சுருள் வடிவில் வரிசையில் சேர்கிறார்கள். வேகமாக நகர்ந்துகொண்டே ஏகதாள கைத்தட்டலும், தரையில் அதிரும் கால் தட்டலும் கொண்டு ஆடுகிறார்கள். இந்த அதிர்வில் கிருஷ்ணா நதியில் ஆயிரக்கணக்கான அலைகள் ஆடுகின்றன.
இதில் ஒருவர் தெலுங்கில் சத்தமாகப் பாட்டுப் பாட, கூட்டத்தில் அனைவரும் எதிர்ப்பாட்டு பாடுகிறார்கள். யாருக்கு உரிமையானவள் இந்த செஞ்சுலஷ்மி என்ற பொருள்பட `எவுருதி, எவுருதி, செஞ்சுலம்மா எவுருதி’ இது பாட்டு. நரசிம்மருக்குச் சொந்தமானவள் செஞ்சுலஷ்மி என்று பொருள்பட `இவுருதி, இவுருதி செஞ்சுலம்மா இவுருதி` என்று எதிர்ப்பாட்டு கூட்டுக் குரலில் அதிரும் ஆட்டத்துடன் ஒலிக்கிறது.
இந்த மலைவாசி கிராம மக்களின் குலத்தைச் சேர்ந்த பெண்ணான செஞ்சுலஷ்மியை நரசிம்மர் மணந்துகொண்டதை நினைவுகூரும் வகையில் விடிய விடிய ஓயாமல் ஆடிப் பாடும் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று இரவு தொடங்கி விடிய விடிய நடைபெறுகிறது. அந்த பக்தியின் ஆத்மார்த்தம் பார்த்துக் கொண்டிருப்பவர்களையும் கரைய வைக்கிறது.

ஸ்ரீ புத்ரப்ராப்த்யஷ்டகம்
முக்கூர் சுவாமிகள் இயற்றிய இந்த அஷ்டகத்தை உச்சரித்துவந்தால் பிள்ளைப் பேறும், மனம் விரும்பியதையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.
யோகாநந்தம் நித்யாநந்தம் நிகமாகம ஸேவிதம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம் மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி!

Link to PutraPrapti Ashtakam written by Sri Mukkur Lakshmi Narasimhachariyar swamigal.
http://murpriya.blogspot.sg/2012/10/sri-putraprapthy-ashtakam-written-by.html

VadaPalli Narasimha Swamy